ட்டிட கலைக்கு பெயர்பெற்றது செட்டிநாட்டு கட்டிடங்கள் ஆகும்.அந்த காலத்தில் கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடுகள் இன்று பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு வீடும் அரண்மனை மாதிரி காட்சி அளிக்கும். வீட்டின் நீளம் ஒரு தெருவில் ஆரம்பித்து மறு தெருவில் தான் முடியும். தமிழ்நாடு அரசு செட்டிநாட்டை சுற்றுலா தளமாக அறிவுத்துள்ளது.

உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டு கட்டிட கலையை பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பல வெளிநாட்டு மாணவர்கள் காரைக்குடியிலேயே தங்கி இவ்வீடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தும் வருகிறார்கள். மழை நீர் சேகரிப்பை பற்றி நாம் இன்று தான் பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் நகரத்தார்கள் அன்றைய காலத்திலேயே மழை நீரை சேகரிக்கும் வகையிலேயே வீடுகளை வடிவமைத்து இருக்கிறார்கள். மழை நீரை சேகரித்து பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.செட்டிநாட்டு வீடுகளை சுற்றிப்பார்ப்பதற்க்கே ஒரு நாள் வேண்டும் .இன்றுள்ள ஆர்கிடெக்டுகளே ஆச்சர்யப்படும் அளவிற்கு செட்டிநாட்டு கட்டிடக்கலை அமைந்துள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் திருடன் ஒருவன்
வீட்டுகாரர்களுக்கு தெரியாமலேயே மூன்று மாதம் வீட்டின் ஒரு பகுதியில் சமைத்து சாப்பிட்டு வந்தானாம்.அப்படியென்றால் எவ்வளவு பெரிய வீடுகளாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

செட்டிநாட்டு வீடுகள் சினிமா துறையினரையும்
விட்டு வைக்கவில்லை. இந்த வீடுகளால் ஈர்க்கப்பட்டு நிறைய சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது . இது வரை தமிழ், மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட நூற்றி இருபதிற்கும் மேற்ப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன. ஏராளமான விளம்பர படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.

செட்டிநாட்டு உணவுமுறைகள் உலகப்புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்களை பார்க்க முடியும். அந்த அளவிற்கு செட்டிநாட்டு உணவு வகைகள் புகழ்பெற்றவை. நகரத்தார்கள் பெரும்பாலும் சிற்றுண்டியை பலகாரம் என்றே அழைப்பார்கள்.

யார் வீட்டுக்கு வந்தாலும் காலபலகாரம் (காலை சிற்றுண்டி)ஆச்சா என்று கேட்பார்கள். அதே போல் மாலை 4 மணியளவில் சாப்பிடுவதை இடைப்பலகாரம் என்று சொல்வார்கள். இவர்களின் திருமணங்களில் சாப்பாடு விஷயம் என்பது மிக முக்கியமான ஒன்று. திருமணங்களில் சைவ உணவே பரிமாறப்படும்.

ஆனால் பரிமாறப்படும் உணவு வகைகள் கணக்கற்றவை .மதிய விருந்துக்கு தலைவாழை (முழு வாழைஇலை )இலை போட்டு 18 வகையான காய்கறிகளுடன் விருந்து வைப்பார்கள் .அதே போல் சிற்றுண்டியிலும் வகை வகையாக வைத்து அசத்தி விடுவார்கள். கவுணி அரிசி, உக்காரை வெள்ளை பணியாரம் , பால் பணியாரம் இட்லி இல்லாமல் சிற்றுண்டி இருக்காது.இன்றும் செட்டிநாட்டில் தயாரிக்கப்படும் சீப்பு சீடை, தேன்குழல், மணகோலம், உருண்ட சீடை அதிரசம் போன்ற வகைகள் உலகின் பல நாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது .
-இணைய செய்தியாளர் - செம்மொழி